அடியேன்

My photo
தூங்காத கனவோடு துவளாத முயற்சியில் ஓயாது உழைப்பது தான் என் தீராத ஆசை. மற்றபடி வெற்றியோ, தோல்வியோ நான் கணக்கில் கொள்வதில்லை.

Monday, October 1, 2012

எது Infatuation?


இவர்கள் எதை 'Infatuation' என்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. முதல் காதலை எதிர்ப்பது இங்கே எல்லோரும் வழக்கமாகச் செய்து வருவது. அது பருவ ஈர்ப்பு, உண்மையான காதல் அல்ல என்று அதிகமாகவே புண்படுத்திவிடுகிறார்கள்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். எது உண்மையான காதலாக இருக்கும். எத்தனை ஆண்டுகள் ஆனபிறகும், முதல் காதல் தோற்று, மறு காதல் வந்து, குடும்பம், குழந்தை என்றான பிறகும்... பசுமை மாறாமல் இன்றும் அந்த முதல் காதல் பிறந்த குழந்தையைப் போல மனதில் பதிந்துகொண்டு நினைவாடுகையில் வரும் ஏக்கமும், தவிப்பும் - பருவ ஈர்ப்புதான் உங்கள் முதல் காதல் தோற்றதற்கு உண்மையான முதற் காரணமாக இருக்கிறதா? ஒரு சில சம்பவங்களை நினைக்கிற போது மனது நெகிழ்ந்து கண்ணீல் நீர் புரண்டு வழிகிறதே... அப்போதும் அது உண்மையான காதல் இல்லை தானா? இழந்தோம் என்று இதயம் துடிதுடித்து நோகிறதன் வலியை உணர்ந்த பிறகும், அது வெறும் பருவ ஈர்ப்பு மட்டுமே என்று உங்களால் ஒப்புக்கொள்ள முடிகிறதா...?

எங்கே... கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கலாம்... முதல் காதல் என்பது கிட்டத்தட்ட பள்ளிப்பருவம் நிறைவடைகிற நிலையில் பிறப்பது... கண்டிப்பாகத் எந்தத்திட்டமிடலும் இல்லாமல் இயல்பாக, பூ பூப்பதைப் போல மனதில் தானாய் பிறந்து, நம்முள் புகுந்து, நம்மில் நிறைவது. ஏதோ ஒரு கணத்தில் பெண்-ஆணிடமோ, ஆண்-பெண்ணிடமோ, தம் மனதைப் பறிகொடுக்கிற மாய நிகழ்வு. அழகோ, அறிவோ,கள்ளங்கபடமற்ற குழந்தைத்தன்மையோ, தெய்வீகமோ - இன்னபிற குணங்கள் எதுவாகினும் இருக்கலாம். ஆனால், அதில் திட்டமிடல் எள்ளளவும் இருக்காது.

ஆனால், பக்குவமடைந்த பிறகு வரும் காதல் (Love after mature) என்று நீங்கள் வரையறை கூறும் காதல் 20 வயதுக்கு மேல் 28 வயதிற்குள் வருவது. அந்தப் பருவம் கிட்டத்தட்ட, கல்லூரியில் பயில்வதாகவோ, வேலை தேடிக்கொண்டிருப்பதாகவோ, வேலையில் அமர்ந்தபின்னரோ இருக்கலாம். இந்த மூன்று நிலைகளிலும் என்ன காரணத்திற்காக காதல் பிறக்கலாம் என்று சிந்திக்கலாமே...

"மச்சான்... அவ செம ஃபிகர்டா.. " என்று சொல்லக் கேட்கிறோம். குறிப்பாக கல்லூரியில் பயிலும் மணமாகாத ஆண்கள் தங்கியிருக்கும் அறைகளில் கவர்ச்சிகரமான பெண்களின் சுவரொட்டிகள் இருப்பதை நீங்கள் சொல்லி அறியவேண்டியதில்லை. பெண்கள் அதிகபட்மான அழகு சாதனங்களை இந்தக் கல்லூரிப் பருவத்தில் தான் பயன்படுத்துகிறார்கள். மெரினா கடற்கறைக்குச் சென்றால் தெரியும்... இந்தப் பருவத்துக் காதலர்களின் உண்மையான நிலை என்ன என்பது... இவையெல்லாம் மறுக்கக்கூடிய காரணிகளா... ஹார்மோன்கள் அதிகமாக தன் வேலையைக் காட்டுகிற உடல்நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு வரும் காதல் பெரும்பாலும் கவர்ச்சியின் பால் தானே இருக்க முடியும். இது தானே உண்மையான 'Infatuation'. எனினும் கல்லூரிக் காதல் முழுமையும் இப்படியானதென்று முழுமையாகக் கூறிவிடமுடியாது. காரணம் இங்கும் முதல் காதல் புனிதம் மாறாமல் பிறக்க விதகளுக்கு அப்பாற்பட்டு ஒரு சில வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் இதில் பெரும்பாலும் கவர்ச்சியின் பால் தான் காதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. பிறக்கிறது.

வேலை தேடுகிற பருவம்... நண்பர்கள் ஒவ்வொருவராய் நல்ல நல்ல வேலைகளில் அமர்ந்து விடுகிறார்கள்." நாம் எப்போது நல்ல பணியில் அமர்வது? தொழிலில் உயர்வது?" என்று சிந்திக்கத் துவங்குகிற போதே அங்கொருவனுக்கு திருமணமாகிவிடுகிறது. எப்படித் தொழிலில், பணியில் நன்நிலைக்கு உயரவேண்டியது சமூகம் எதிர்பார்க்கும் காரணியாக இருக்கின்றதோ... அதே போலத் தான் திருமணமும்... குறித்த வயதைக் கடந்துவிட்டால், "இன்னும் பெண் அமையவில்லையா...", "எப்போது திருமணம்... நல்ல மாப்பிள்ளையா சீக்கிரமா பாருங்க...", "பெண்களை திருமணமாகாமல் அதிக நாள் வீட்டில் வைத்திருக்கக்கூடாது..." என்று எத்தனையோ காரணங்கள். சமூகம் விடாது துரத்தும். அதன் பிடியிலிருந்து மீள்வதற்காகவாவது விரைவில் திருமணம் செய்வது கட்டாயமாகிவிடுகிறது. பார்க்கிற பெண்களெல்லாம் "யார் நமக்கு மனைவியாகப் போகிறார்கள்?" என்று எண்ணத் தூண்டுகிற வயது. "தனக்கு எப்பேர்ப்பட்ட கணவர் அமையவிருக்கிறோரோ?" என்ற கனவைத் தூண்டுகிற நிலை. "சீக்கிரமா ஒரு நல்ல பொண்ணாப்பார்த்து கட்டிவைங்கப்பா... பையன் தான் நல்ல வேலைல இருக்கான்ல..." என்று சிபாரிசுகளும் கூட வரும். "உனக்குப் பொண்ணு எப்படிப்பா வேணும்? இப்பவே சொல்லிரு... உனக்கு எப்படி வேணுமோ, அப்படியே பார்த்திருவோம்... அப்பறம், நாங்க கட்டாயப்படுத்தினதால தான் கட்டிக்கிடேன்னெல்லாம் சொல்லக்கூடாது" என்று கேட்டுவிட்டால் போதும்... வரிசையாக ஒரு பெரிய பட்டியலே வாசிப்பார்கள்... ஆக, இதில் எங்கே காதல் இருக்கிறது! முக்காலும் இந்தப்பருவத்திற்கும் - காதலுக்கும் சம்மந்தமே இல்லை. காரணம்... வீட்டில் பார்க்கும் திருமணம் என்கிற திட்டத்திற்குப் பெரும்பாலும் அவர்களே முழுமையாக மனதைக் கட்டமைத்துக்கொண்டிருப்பார்கள். முழுக்க திட்டமிட்டு, எழுதி வைத்த இலக்கணங்களுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப மாப்பிள்ளையோ, பெண்ணோ பார்த்து, அதில் பல அமைந்து, சில அமையாமல்... "சரி பரவாயில்லை... சகித்துக்கொள்ள முடியும்" என்று அவர்களே மனதைத் தேற்றிக்கொண்டு பந்தத்தைத் துவங்குகிறார்கள்.

ஆனால், பணிபுரியும் இடங்களிலோ, வேலை தேடுகிற போராட்டத்தின் போதோ நம் துயரத்தில் பங்கெடுத்துக்கொண்டு நம்மைப் புரிந்து கொள்கிற நபர்களின் மீது நமக்கு உண்மையான காதல் மீண்டும் துளிர்விடுகிறது. நாம் இவர்களைக் கருத்தில் கொண்டாக வேண்டும். ஆனால், சமூகத் தேவைகளுக்காக அதை பெரும்பாலும் அவர்களே முறித்துவிடுகிறார்கள். "வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. இனிமே, என்ன பார்க்க வராதீங்க", "என்னன்னே தெரியல. இப்பல்லாம் ஃபோனே எடுக்க மாட்டேங்கிறான்டி" - இதெல்லாம் நாம் அன்றாடம் கேள்விப்படுகிற வலிகள் தானே. இதையெல்லாம் நீங்கள் பக்குவமடைந்த பிறகு தானே செய்கிறீர்கள். அதிக வரதட்சணை கிடைக்கிறது, டாக்டர் மாப்பிள்ளை என்று ஏதேதோ காரணங்களுக்காக உயிர்ப்புள்ள காதலை, தெரிந்தே கொலைசெய்கிற செயலை உங்கள் பக்குவம் உங்களுக்குத் தருகிறது. இது தானே பக்குமான உங்களால் காதல் அடைகிற பலன். காதலை பெற்றோர்கள் சேர்த்துவைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயல்வது... இது பக்குவமடைந்தவர் செய்கிற செயலா? உங்கள் பால்ய காதலின் போது நீங்கள் இதைத்தான் செய்தீர்களா...

உண்மையான காதல் என்ன செய்யும்... உங்களை மேம்படுத்தும்... குப்பையாய் இருந்த உங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தரும். கிழிந்த, அழுக்கான ஆடைகளை உடுத்திக்கொண்டிரு்ந்த நீங்கள், ஒரே ஒரு பார்வைக்காக உங்களையே மாற்றிக்கொள்வீர்கள். புன்னகைக்க வைக்கும். புத்துணர்ச்சி தரும். பொறுப்புணர்வை உரைக்கவைக்கும். முன்னைக்காட்டிலும் முன்னூறுமடங்கு வேகத்தில் உங்களை முன்னெடுத்துச் செல்லும். குதூகலத்தில் திழைக்கச் செய்யும். மனமெங்கும் மகிழ்ச்சியை நிரம்பிவழியச் செய்து, உள்ளம் முழுதும் உயிர்நிரப்பும். பொறுமை தரும். வறுமையை விஞ்சும் ஆற்றல்கொள்ள வைக்கும். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் சிரித்துக்கொண்டே உங்களால் கடந்துவிட முடியும். திறமை தரும். தீரம் தரும். வரம் தரும். வைராக்கியம் தரும்.

நீங்கள் பக்குவமடைந்த பிறகு வரும் காதல் இப்படியான ஒன்றாகத்தான் இருக்கிறதா... இவையெல்லாவற்றையும் தான் தருகிறதா... இல்லவே இல்லை. காரணம்... நீங்கள் சொல்கிற பருவத்தில் காதல் பெரும்பாலும் பொய். வருகிற ஒன்றிரண்டும் வந்தவண்ணமே வந்தவேகத்திலேயே போய்விடுகிறது... அதிலும் எத்தனை எதிர்பாப்புகள். வியாபாரங்கள். வஞ்சனைகள்.

கொஞ்சம் நினைவு கூறுங்கள்... பால்யத்தில் நீங்கள் பெற்ற காதல் எப்பேர்ப்பட்டது? எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது...எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காதது... காதலுக்காக எதையும் செய்யும் துணிவைத் தருவது... ரசிக்க வைத்தது... ருசிக்க வைத்தது... சிரிக்க வைத்தது... மிதக்க வைத்தது... பண்படுத்தியது... பக்குவம் தந்தது... கண் வழியே புகுந்து, செல்களெல்லாம் சிலிர்க்கச் சிலிர்க்க ரசாயன மாற்றங்கள் செய்தது... உறங்கிக்கொண்டிருந்த உங்களை உசுப்பி, உயிருணர்த்தி, உற்றுநோக்கச் செய்தது. தடைகள் தகர்த்தது. வழிகள் தந்தது. விடியல் காட்டியது. விருந்து படைத்தது. நிறங்களை நிரப்பி நாட்களைச் செலுத்தியது. சிறகுகளைத் தந்து வானைச் சொந்தமாக்கி, உலகப்பந்தை உங்களுக்கடியில் உருளச்செய்தது. குழந்தையின் மழலையைப் போல கள்ளங்கபடமற்ற காதல் இனி்க்க இனிக்க வாழ்வை வளம் செய்தது. இதில் 'Infatuation' எங்கிருந்து வந்தது?

அவளுக்கு முடியாமல் போனால், மடியில் தாங்கி மருந்தூட்ட வேண்டும் என்று எண்ணத் தோன்றியதே... அதற்குப் பெயர் தான் உங்கள் மொழியில் 'Infatuation'-ஆ? பூரணமான முழுநிலவில் ஒளிவெள்ளத்தில் கண்ட அவள் புன்னகை முகத்தை மறக்க முடியாமல் தவிப்போமே... அதைத்தான் 'Infatuation' என்கிறீர்களோ? என்னைக் கடக்கும் விநாடிகளில் மனம் படபடத்து இதயம் விநாடிக்கு 200 முறை துடிக்குமே... ஒரு வேளை இது 'Infatuation'-ஆக இருக்கலாமோ? விளையாட்டாய்த் தட்டிவிட்ட தேனிக்கூட்டிலிருந்து புறப்பட்டு வந்து கொட்டிய தேனீக்களின் உயிர்வலியைப் பொறுத்துக்கொண்டு, அவளை அணுவளவும் ஆபத்தின்றி காத்த மகிழ்ச்சியில் எனக்கு ஒரு முத்தமிட்டாளே... அப்படியானால் இது தான் 'Infatuation'-ஆக இருக்க வேண்டும்... சரிதானா? சும்மா கிடந்த என்னை, கவிஞனாக்கி, சிந்தனாவாதியாக்கி, தொழில்நுட்பத்தில் சிறந்தவனாக்கி,மூளையின் முடிச்சுகளுக்குள் அறிவை விரிவு செய்யும் கட்டளையை உட்புகுத்தி, பாறாங்கல்லைச் சிற்பமாக்கி, சிற்பத்திற்கு உயிர்தந்து உலவவிட்ட மதிநுட்பம் கற்றவளாய் இருந்தவளின் இந்த மாயத்தைத்தான் இவர்களெல்லாம் 'Infatuation' என்று கூறுகிறார்கள் போலும்.

பருவ ஈர்ப்போ, பாலியல் எண்ணமோ எள்ளவும் இதயத்தை அழுக்காக்கிடாத, அப்பழுக்கற்ற காதலய்யா அது. "சிறு வயதில் வருகிற காதலெல்லாம் 'Infatuation'" என்று ஒரே வார்த்தையில் மனசாட்சியே இல்லாமல் சொல்லிவிடுகிறீர்கள்... முதல் காதல் முறிவின் வலி இறக்கும் வரை உறுத்தக் கூடியது. அவர்கள் அவர்களாகவே சிந்தித்து செயல்பட அறிவுறுத்தி அவர்களுக்கு வாய்ப்பளித்தால் போதும்... முன்னேறுவதற்கு அவர்களிடத்தில் காதல் இருக்கிறது. சாதிப்பதற்கு அவர்களுக்கு சக்தியிருக்கிறது. எல்லாம் செய்து முடித்துவிட்டு, தக்க பருவத்தில் மணம் செய்துகொள்ளட்டுமே. அவர்களை கட்டுப்படுத்தலாமே தவிர, கரம்பிரித்து, காதல் முறித்து, வறுத்தி, வலிதந்துவிடுகிறீர்களே... மூடர்களே... வாழத்தானே பிறந்தோம். இது ஏன் உங்களுக்கு கடைசிவரை புரிவதே இல்லை...? காலங்காலமாய் நீங்கள் செய்யும் கொடுமையில் எத்தனை காதல்கள் மாண்டுபோனது தெரியுமா... அத்தனையும் புனிதம்... அத்தனையும் அறிவு... அத்தனையும் உயிர்ப்புள்ள மகிழ்ச்சி... இனியாவது, எதிர்ப்பதை நிறுத்திவிட்டு, எண்ணிப்பாருங்கள்!

என்றென்றும் காதலுடன்,
-தமிழ் வசந்தன்

Tuesday, March 6, 2012

சுயநல மனிதர்களால் சீரழியும் இந்தியா



எங்கே போகிறோம்... என்ன நடக்கிறது... சுயநலம். முல்லைப் பெரியாரிலும், காவிரி நீரிலும் ஒருமைப்பாடு காணாத இந்தியா... சாதிக்கொடுமைக்கு ஒரு பரமக்குடி துப்பாக்கிச் சூடு... விழுப்புரம் இருளர் இனப்பெண்கள் நால்வரைக் கற்பழித்த காவலர்களுக்கு தண்டனை இருக்கட்டும். இந்தக்கொடூரத்தை அரங்கேற்ற எப்படித் துணிந்தார்கள்... இவர்களுக்காக ஏன் எவரும் போராடவில்லை. காலகாலமாய் நேரு வர்க்கமே நாடுளும் வறட்டு ஆளுமை... அலைக்கற்றை ஊழல்... அதர்ஷ் ஊழல்... காமன் வெல்த் ஊழல்... ஆயிரமாயிரம் கோடிகளாய் சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம்... சோனியாவின் முடிவுக்குக் காத்திருக்கும் மன்மோகன், மன்மோகன் முடிவுக்குக் காத்திருக்கும் மந்திரிகள்... மந்திரிகள் கையொப்பமிடக் யோசிக்கும் உத்தரவுக் கோப்புகள்... எதையும் செய்யப்போவதில்லை என்று தெரிந்தும் நம்பி ஏங்கி நிற்கும் இந்தியா...

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறிய அளவில் குறைந்து வந்த பணத்தின் மதிப்பு, இன்னும் விரைவாக ஆண்டுக்கொருமுறை மிக அதிக அளவில் குறைந்து வருகிறது. போன ஆண்டில் அறிமுகமான ஒரு ரூபாய் நாணயத்தின் அளவு இந்த ஆண்டு ஐம்பது பைசா அளவிற்கு பாதியாகக் குறைகிறது என்றால், 50 விழுக்காடு இந்தியப் பொருளாதாரம் அதிவிரைவாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தானே பொருள்... மலைவாசிகளுக்கு அரசு என்கிற பெயரில் இவர்கள் கொடுத்த தொல்லை, தீவிரவாதமாக மாறி, இந்தியாவுக்கு எதிராக முளைத்திருக்கிறது. இதில் அரசின் தவறு இல்லவே இல்லையா... இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்று கூறும் பாரதிய ஜனதா, காங்கிரஸ் வீழ்ந்தால் தான் ஆட்சி நாற்காலியை பிடிக்கிறப் பேராசையோடிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஏன், இந்தியாவில் முகமதியர்கள் இந்தியக்குடிமக்கள் இல்லையா... கிறத்தவர்கள் வரக்கூடாதா... எல்லோரும் சேர்ந்து தானே சுதந்திரத்திற்குப் போராடினோம். இவர்களை விட்டால் மதவாதம் என்கிற பெயரில் கலவரத்தைத் தூண்டி, மீதி இந்தியாவையும் ரத்தபூமியாக்கிப் பார்ப்பார்கள்.

விளைநிலங்களையும், கால்வாய்களையும், கண்மாய்களையும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி பல நீர்நிலைகளை அழித்துவிட்டோம். இவர்களுக்கெல்லாம் இந்தச் சீரழிவுகளைச் செய்ய அனுமதி கொடுத்தவர்கள் யார்... அரசின் துணையில்லாமல் தான் இவையெல்லாம் செய்யப்பட்டதா... சுயநலம். பணத்தைப் பெற்றுக்கொண்டு எத்தனை லோடு மணலை வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டுபோக, இந்திய நதிகளைக் கற்பழிக்க அதிகாரிகள் அனுமதி கொடுத்ததன் விளைவு... 5 ஆண்டுகளுக்கு முன் வயல்வெளியாக இருந்த இடங்களிலெல்லாம் கட்டிட நெருக்கடிகள்... இந்திய அளவில் கடும் விலையேற்றம்... உலக வங்கி தந்த பல்லாயிரம் கோடி கடன்களில் சிறிதளவைக் கூட நாம் இன்னும் கட்டி முடிக்கவில்லை. எந்தச் சுதாரிப்பும் இல்லை. நிலத்தடி நீரின் அளவு குறைந்துவருகிறது. அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கான கடன் இதுவரை அடைக்கப்படவில்லை.

அரசியல்வாதிகளின் சுயநலச் சதுரங்கத்தில் இந்தியா பாழாகிக்கொண்டிருக்கிறது. மத்தியில் நல்லாட்சி செய்ய தகுதியான கட்சியோ, அமைப்போ, நல்ல நபரோ இதுவரை எதுவுமில்லை. ஏற்றுமதியைவிட, இறக்குமதியை அதிகம் செய்துகொண்டிருக்கிறோம். அது தொடர்ந்தால்... வெளிநாட்டு உணவுப்பொருள் விளம்பரங்களால் பணம் பார்ப்பது மட்டுமல்ல... நமக்கே தெரியாமல் ஒவ்வொரு இந்தியனின் ஆயுளையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் மெதுவாக ஆட்கொள்ளும் நஞ்சை உணவுகளில் கலந்து விற்று, இறுதியில் பிற நாடுகள் இந்தியாவை எளிதில் கைப்பற்றிவிடும் அபாயம் இருக்கிறது. அந்த உணவுப் பொருளை எல்லாம் ஏதாவது சுயநலமுள்ள அதிகாரி பணம்பெற்றுக்கொண்டு விற்பதற்கு அனுமதி கொடுத்துவிடுவார். கவலையோ, கேள்வியோ இல்லாமல் அவையெல்லாம் நம் மூளையை பாதிப்பிற்குள்ளாக்கும். பாகிஸ்தானில் அதிக அளவில் இந்திய ரூபாயின் கள்ள நோட்டுக்கள் அச்சிடப்பட்டு மும்பை தாதா தாவூத் மூலமாக அண்டை நாடுகளுக்குப் பிரிக்கப்பட்டு, அங்கிருந்து பல வழிகள் வழியாக இந்தியா வந்து, கைமாற்றப்படுவதாக சமீபத்தில் செய்தி வந்தது. பாகிஸ்தானின் அடுத்த இலக்கு இந்தியாவிற்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவது தான். ஆனால், சுயநலமிக்க அதிகாரிகளை, சுயநலமிக்க அரசுகள் சுதந்திரமாக விட்டுவிட்டதன் விளைவால் இந்தியா இன்னொரு பஞ்சத்தை விரைவில் எதிர்கொள்ளும். ஆம், அரிசி, நீர், பெட்ரோல் இல்லாமல், சுயநலமிகளால் பிற நாடுகளின் நயவஞ்சகத்திற்கு ஆளானால் நாம் பஞ்சத்தைத் தான் சந்தித்தாக வேண்டும்.

2012ல் உலகம் அழியுமா தெரியாது... ஆனால், நாம் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பஞ்சம் பசி தரும். உணவு இருக்காது. தாகம் உயிர் கொல்லும். பணத்தையும், தங்கத்தையும் நாம் உண்ண முடியாது. பழி வெறுப்பைத் தரும். அன்று சுயநலமிகளால் சீரழிக்கப்பட்டதன் வலியை உணர்வோம். வறுமை போராடக் கற்றுத் தரும். போர் புரட்சி செய்யும். வரலாறு உருவாகும். அன்று தான் தீண்டாமையும், அதிகார மமதையும் வேரோடு அறுந்து, மனிதத்தை நேசிக்க முடியும். மனிதனை மதிக்கக் கற்றுக்கொள்வோம். இதை உணர்ந்தவர்களில் சில சமானியர்கள் தீவரிவாதிகளாக இல்லை. ஆனால், தவிப்புள்ள தீவிமானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களில் நானும், உணர்கையில் நீங்களும் ஒருவர்...

கனன்றெரியும் இந்தியன்
-தமிழ் வசந்தன்


Sunday, December 4, 2011

வைகையின் வாழ்க்கை

வைகையின் வாழ்க்கை - சோதனைகளை மீறி வந்த வெள்ளத்தின் அழகைக் காட்டியபடி, வைகை நதியின் அவல நிலையை நினைவுகூறும் காட்சி வடிவ ஆதங்கம்

நவம்பர் 26, 2011ல் கரைபுரண்டோடிய வைகை. மதுரைவாசிகள், புலம்பெயர்ந்த மதுரை வாசிகள் மற்றும் வைகையின்பாற் வேட்கை கொண்டவர்களுக்காக... கண்குளிரப் பாருங்கள். ஆசைதீரப் பாருங்கள். இந்த வெள்ளம் இன்னும் எத்தனை நாளைக்கு என்பதை கேட்டு, நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

வைகையில் வெள்ளம்...
விரகனூர் மதகணையின் அவலம்...
வைகையின் பிறப்பிடம் மேகமலைக்காட்டில் நடக்கும் அக்கிரமம்...
இன்னும் பல...




வைகை மகன்,
தமிழ் வசந்தன்

இந்தப் பதிவை இடுவதற்கு முன்புவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை: 310

Wednesday, November 9, 2011

ஏழைச் சைவன் எந்த ஹோட்டலுக்குப் போவான்?


ஹோட்டல்களில் இன்று விற்கப்படும் விலையைக் கேட்டால் கடவுளுக்கே அடுக்குமோ என்னமோ. அசைவம் உண்பவர்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்ளமுடியும். ஆனால், சைவம் உண்பவர்களின் கதி இருக்கிறதே. . . கேட்கவே வேண்டாம்.

இங்கே நான் சைவம் பெரிதா, அசைவம் பெரிதா என்று போட்டி போட விரும்பவில்லை. கடவுள் இருக்கிறது என்று சொல்ல ஒரு கூட்டம் உண்டு. கடவுளை மறுப்பதற்கு ஒரு கூட்டமும் இதே சமூகத்தில் இருக்கிறது. இரண்டு பேருக்கும் தன் கருத்தைச் சொல்லவும், அதைப் பின்பற்றி நடக்கவும் சம உரிமை இருக்கிறது. அதே போல சைவ உணவுமுறையைக் கறாராக்க் கடைபிடிப்பவர்கள், அசைவத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று இருவேறு கூட்டமும் இருக்கிறது. ஆனால், எந்த அளவிற்கு அவர்களுக்கு அவற்றைக் கடைபிடிக்க இந்தச் சமூகம் அனுமதிக்கிறது என்தைத்தான் பார்க்கவேண்டும்.

சைவ உணவிற்கென்று பிரத்தியேகமான ஹோட்டல்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றிலெல்லாம் சென்று ஒரு ஏழைச் சைவன் உண்ண முடியாது. கோவை ஆனந்தாஸில் மதியச்சாப்பாடு சாப்பிட 65 ரூபாய் செலவு செய்தாக வேண்டும். அதே உக்கடம் சிந்தூரியில் 55 ரூபாய் தயிருடன். காந்திபுரம் கௌரிசங்கர் சைவ உணவகத்தில் தப்பித்தவறி ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டு சேல்ஸ் டேக்ஸ் உட்பட 18 ரூபாய் செலவு செய்துவிட்டு வந்தேன். மதுரையில் காபி, டீக்குப் பெயர் போன ஜம்ஜம் ஸீவீட் ஸ்டாலில் இரண்டுமே தேவமிர்தமாய் இருக்கும். வெளியூர்களிலிருந்தெல்லாம் இருந்து இங்கே காஃபி சாப்பிடுவதற்காகவே வந்து போவார்கள். அப்பேர்ப்பட்ட இடத்திலேயே ஒரு காஃபி 10 ரூபாய் தான். ஒரு டீ 8 ரூபாய் தான். இங்கே குடித்த காஃபி அப்படியொன்றும் பிரத்தியேகமான தயாரிப்பு ஒன்றும் கிடையாது. டவராவில் காஃபி டம்பளரை வைத்துப் பரிமாறப்படும் அதே கசக்கும் எப்போதும் போன்ற பொதுவான காஃபி வகையறா தான். இதற்கு எதற்கு 18 ரூபாய்?

நானும் நண்பனும் அன்னபூர்ணாவில் ஒரு பொங்கல், ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு 48 ரூபாய் செலவு செய்துவிட்டிருந்தோம். இவ்வளவு செலவு செய்தும் வெறும் தட்டைக் கழுவி அதில் பொங்கலையும் சாம்பாரையும் ஊற்றிக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். தட்டில் வட்ட இலை வைக்கிற வழக்கம் இன்றைய காலத்தில் கையேந்தி பவனில் கூட இருக்கிறது. சில இடங்களில் பேப்பர் வைத்து அதில் பிரிமாறுகிறார்கள். இவ்வளவு செலவு செய்து சாப்பாடாவது சுவையாக இருக்குமா என்றால் அன்னபூர்ணா சாப்பாடு, செலவு செய்கிற பணத்திற்கு திருப்தி தருவதாக இல்லை. காஃபி டம்பளர் அளவுக்குக் கொடுக்கப்படும் பொங்கல் தான் அங்கே முப்பது ரூபாய்.

இது கூடப் பரவாயில்லை. தனியொரு மனிதனாக கௌரி சங்கருக்ககுச் சென்று சாப்பிட்டால் நம்மை ஏன் என்று கேட்க ஆளே இருக்காது. வெய்ட்டர் எவரும் என்ன சாப்பிடுகிறீர்கள், என்று ஆர்டர் கேட்க்க் கூட வரமாட்டார்கள். நாம் தான் கூப்பிட்டு விசாரித்து ஆர்டர் தரவேண்டும். இப்பேர்ப்பட்டவர்கள், பில்லைத் தட்டில் வைத்து அதில் கொஞ்சம் சீரகத்தையும் வைத்துக் கொடுத்து டிப்ஸ் கேட்க மட்டும் வந்து விடுவார்கள். அதுவும் பத்து ரூபாயாகத் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மூஞ்சி கோனிவிடுகிறது. அதற்காக அந்த 5 ரூபாய் நாணயத்தை அவர் வேண்டாம் என்று விட்டுவைக்காமல் இல்லை.

மதுரையில் 12 ரூபாய்க்குக் குறைவாக கையேந்தி பவனில் கூட தோசை கிடைப்பதில்லை. பெரிய ஹோட்டல்களில் 18 ரூபாயில் ஆரம்பிக்கிற தோசை விலை, அதிகமாக மக்கள் புழங்கும் ஹோட்டல்களில் 25 ரூபாயைத் தாண்டிவிடுகிறது. சரி, இட்லியாவது சாப்பிடலாம் என்றால் 2 இட்லி 14 ரூபாயில் ஆரம்பித்து 20 ரூபாயையும் தாண்டிவிடுமளவு விலை வைக்கிறார்கள். என்ன தான் செய்வான் சைவன்.

எந்தச் சைவ ஹோட்டல்களும் சாமானியனுக்குப் பக்கத்தில் இல்லை. அசைவ முறையைப் பின்பற்றும் கடைகளுக்குச் செல்லவேண்டிய நிர்பந்த்த்தில் நடுத்தர, ஏழைச் சைவ முறையைக் கடைபிடிப்பவர்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள். ஏனென்றால் சாமானியர்களுக்கான ஹோட்டல்கள் கிடைக்கிற கொஞ்ச வருவாய்க்காக முற்றிலும் சைவ ஹோட்டல்காளாக நடத்த முடியாது. ஆஃப்பாயில், ஆம்லெட், மீன், சிக்கன் குழம்பு இவையெல்லாம் வைத்தாக வேண்டும். சைவத்திற்குத் தனி, அசைவத்திற்குத் தனியென்று பாத்திரங்களைப் பிரித்து உபயோகித்துப் புழங்குவதும் இவர்களால் இயலாது. கிடைக்கிற கொஞ்சம் வருவாயில் இத்தனை செலவு செய்து தொழில் பண்ண முடியாது. சிறு சிறு ஹோட்டல்களில் கோவையில் புரோட்டாவோ, தோசையோ 7 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஓரளவு சுமுகமான விலை தான். ஆனால், அவைகள் அசைவம் புழங்கும் ஹோட்டல்கள். செல் ஃபோனில் பேசிக்கொண்டே புரோட்டா ஆர்டர் செய்தால், கவனிக்கும் முன் சிக்கன் குழம்பை ஊத்திச் சென்றுவிடுவார்கள். பிறகு அதை குப்பையில் போட்டுவிட்டோ அல்லது அதை இலையிலேயே கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டோ தான் உண்ண வேண்டும். சுதந்திரமாக சாப்பிட எண்ணி, இதை கவனிக்காமல் எத்தனையோ முழுச் சைவர்கள் அசைவ ஹோட்டல்களில் இத்தகைய அனுபவத்தை பெற்றிருப்பார்கள் என்பதெல்லாம் சாதரணமே.

இத்தகைய ஹோட்டல்களில் இட்லியை ஒரு தீண்டத்தகாத பொருளாகவே எண்ணி ஒதுக்கியே விட்டார்கள். ஏனென்றால், 2 இட்லி 6 ரூபாய் என்று விலைப்பட்டியலில் போட்டுவிடுகிறார்கள். வருகிறவர்கள் 5 இட்லி உண்டு விட்டு, வயிறை நிரப்பிக்கொண்டு, தோசையோ, புரோட்டாவோ கேட்பதே இல்லை. அதனால், விலை அதிகமுள்ள சரக்கை விற்க எண்ணி, இட்லியை எப்போதாவது தான் செய்கிறார்கள். அதுவும் ஒரு ஈடோ, இரண்டு ஈடோ. . . அதையும் மறைத்துத் தான் வைத்திருப்பார்கள். யாராவது ஒரு புண்ணியவான் வந்து கேட்டால் மட்டும் தான் எடுத்துக் கொடுக்கிறார்கள். மற்றபடி இத்தகைய ஹோட்டல்களில் இட்லியைச் சுடுவதும் இல்லை. வருகிறவர்கள் இட்லி என்று கேட்பதும் இல்லை. அந்த மரபையே கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துவிட்டார்கள். இப்போது இட்லி வீட்டில் மட்டுமே கிடைக்கும் ஒரு பதார்த்தம். விலை இன்னும் குறைவாகப் போனால் அந்தச் சாப்பாட்டை உண்பதால் பசியாறுமே தவிர எல்லாப் பிணிகளும் வந்து தொலைக்கும். அந்த அளவுக்கு மட்டமான அரிசி, மட்டமான எண்ணெய், முக்காலும் பாமாயிலாகத்தான் இருக்கும்.

எல்லோருக்குமான விலையில் சைவ ஹோட்டல்கள் இனி வர வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது. ஆசார, அனுஷ்டானங்களைக் கடைபிடிக்கும் பார்பணியர்களை விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் தான் இப்போது அதிகமாக அசைவம் உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே சைவத்தின்பாற் விருப்புகொண்டு அதைக் கடைபிடிக்க விரும்பும் ஒரு பேச்சுலர் ஏழைச் சாமானியன் என்ன தான் செய்வான் ?

ஏழைச் சைவர்களுள் ஒருவன்,
தமிழ் வசந்தன்